2026 முதல் ஜெர்மனியில் மீண்டும் அமெரிக்க ஏவுகணைகள்

2026 முதல் ஜெர்மனியில் மீண்டும் அமெரிக்க ஏவுகணைகள்

2026ம் ஆண்டு முதல் அமெரிக்கா தனது நீண்டதூரம் பாயும் ஏவுகணைகளை ஜெர்மனியில் மீண்டும் கொண்டிருக்க உள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்காவும், ஜெர்மனியும் புதன்கிழமை தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் SM-6 மற்றும் Tomahawk வகை ஏவுகணைகளே இவ்வாறு ஜெர்மனியில் நிலைகொள்ள உள்ளன. SM-6 கிடையாக 240 km தூரம் (நிலத்தில் இருந்து நிலத்துக்கு) அல்லது மேல் நோக்கி 460 km உயரம் (நிலத்தில் இருந்து வானுக்கு) சென்று தாக்கவல்லது. இதன் அதி உயர் வேகம் மாக் 3.5 (4,287 km/s). Tomahawk 2,500 km தூரம் வரை சென்று தாக்க வல்லது.

1987ம் ஆண்டு அமெரிக்க சனாதிபதி றேகனும், சோவியத் தலைவர் கொர்பசோவும் செய்துகொண்ட (Intermediate-Range Nuclear Treaty) ஒப்பந்தப்படி இருதரப்பும் 500 km தூரத்துக்கு அப்பால் செல்லும் ஏவுகணைகளை கொண்டிருக்க முடியாது. 

அந்த உடன்படிக்கைக்கு ஏற்ப ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, Czech ஆகிய நாடுகளும் தமது ஏவுகணைகளை அழித்தன.

அனால் அமெரிக்காவால் அந்த உடன்படிக்கை கைவிடப்பட்டதால் 2019ம் ஆண்டு முதல் இருதரப்பும் 500 km கட்டுபாட்டில் இருந்து விடுபட்டன.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மீண்டும் முறுகல் நிலை தோன்றி உள்ளதால் மேலும் பல ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்படலாம். அத்துடன் சீனா போன்ற புதிய ஏவுகணை நாடுகளும் போட்டியில் இறங்கும்.

ஆனால் ஜெர்மன் மீது காழ்ப்பு கொண்ட ரம்ப் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் என்ன செய்வார் என்பது கேள்விக்குறியே.